பதிவர் சிந்தாநதிக்கு அஞ்சலி
பதிவர் சிந்தாநதி மறைந்த செய்தி டிவிட்டரிலும் பின்னர் அவரது வலைத்தளத்திலும் பார்த்தபோது நம்பமுடியவில்லை. இன்று காலை மின்னஞ்சலில் அவரது சகோதரர் அந்த சோக செய்தியை உறுதிசெய்தார்.
சிந்தாநதியிடம் பலமுறை பேசியிருக்கிறேன். சற்றுமுன் தளத்தை வடிவமைத்ததில்(ரவிஷங்கருடன்), கட்டியெழுப்பியதில் அவருக்கும் பெரும்பங்குள்ளது. வலையில் பல புதிய முயற்சிகளை செய்தவர். வலைச்சரம் மிகவும் வெற்றிகரமாக அமைந்தது. அவரது திரட்டிகளின் திரட்டியை (தமிழ் கணிமை)கொஞ்ச நாள் பயன்படுத்தி வந்தேன். ஜெயமோகன் தளத்தின் லோகோவை உருவாக்கியவர் சிந்தாநதிதான். அண்மையில் அவர் மீண்டும் பதிவுக்கு வந்த போதும் உரையாடினோம்.
கடின உழைப்பும் உதவும் மனப்பாங்கும் சிந்தாநதியின் முக்கிய குணங்கள். சற்றுமுன் தள வடிவாக்கத்தின்போது ஒரு இரவு முழுதும் விழித்திருந்து செய்து முடித்தார். எந்த பிரதி பலனும் பாராமல் உதவி செய்தவர்.
உடல் ஊனமுற்றவரான சிந்தாநதி எங்கேயுமே அதை முன்வைத்து பேசியதில்லை. அவரது பதிவுகளிலும் செயல்பாட்டிலும் தன்னம்பிக்கை நிறைந்திருந்தது.
அவரை அடுத்த முறை ஊர் செல்லும்போது பார்க்கலாம் என சொல்லியிருந்தேன்.
அவருக்கு ஒரு பெண்குழந்தை இருக்கிறதென்பது தெரியும் குடும்பம் குறித்த வேறு தகவல்கள் தெரியவில்லை. அவர்கள் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள். சற்றுமுன் குழுமத்தார் சார்பிலும் என் இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த பதிவில் பின்னூட்டங்களிட்டு அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். (http://valai.blogspirit.com/archive/2009/07/07/அஞ்சலி.html)
குடும்பத்தினரால் நடத்தப்பெறும் அஞ்சலி நிகழ்வுகள் 9 ஆம் நாள் (ஜூலை திங்கள் 10 ஆம் நாள் ) குடும்ப கல்லறை தோட்டத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
Popularity: 19% [?]
Print This Post
இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப
RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....

July 8th, 2009 at 3:35 pm
சிந்தாநதியுடனான என் தொடர்பு சுமார் ஐந்தாண்டுகளாகத் தொடர்வது.
எழுத்தார்வம், கணிமை நுட்பம், ஊடகங்கள் பற்றிய தெளிவு, அனைத்துக்கும் மேலாகத் தமிழ்மேல் ஆழ்ந்த பற்று இவை ஒருங்கே அமையப் பெற்றவர் சிந்தாநதி. அனுராக் என்ற பெயரில், வலைஞன் என்ற வலைப்பதிவை நடத்தியபோது அறிமுகமானார். பின் ஒரு புதுமையான உருவமாக வெளிப்பட விரும்பி, சிந்தாநதி என்ற பெயரிலேயே கடந்த 3 – 4 ஆண்டுகளாக அறியப்படுபவர். பலமுறை மின்னஞ்சலூடாகவும், மின் அரட்டையூடாகவும் எண்ணங்களைப் பரிமாறிக்கொன்டிருந்தோம். பலமுறை போனில் பேசியிருக்கிறோம். நேரில் சந்திக்காவிட்டாலும் பழகுவதற்கு இனிய நண்பராகவும், கண்ணியமும் மதிப்பும் பொறுமையும் சக மனித உணர்வுக்கு மதிப்புக் கொடுக்கும் தன்மையும் அவரிடத்தில் நான் கண்டு வியந்தவை.
கடந்த இரு ஆண்டுகளாக தமிழ் வலை உலகில் நடப்பவற்றில் அதிகம் ஈடுபடமுடியாததால் இப்போது அதிகம் பேசவோ ஊடாடவோ இயலுவதில்லை. ஒருமுறை மின்னஞ்சலிலும் போனிலும் பிடிக்கமுடியாமல் ‘சிந்தாநதி எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்’ என்று என் வலைப்பதிவில் கூவியும் இருக்கிறேன். ஓரிரு மாதங்களுக்கு முன் மீன்டும் ஒருமுறை போனில் அழைத்தார். நீண்ட நேரம் பேச வாய்க்கவில்லை. எதோ ஒரு நுட்ப சிக்கலுக்கு விடை கேட்டார். தமிழ் தட்டுவதற்கே பொங்குதமிழ் தேடும் நிலையில் நானிருக்கையில் அவருக்கு என்ன சொல்லமுடியும்? என்னவோ சொன்னேன். அது பலித்ததா என்றுகூட நினைவில்லை.
உமர்தம்பியையும், சாகரனையும் கலந்து செய்த வார்ப்பாம் சிந்தாநதி, அவர்களைப் போலவே தமிழ் கணிமைக்காக, தமிழ் வலைக்காக தன் உழைப்பைச் செலவிட்டார். இது பெரும் இழப்பு. அவரை இழந்து வாடும் குழும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள்.
July 9th, 2009 at 4:31 am
என்னுடைய இ-தமிழ் வார்ப்புருவையும் என் விருப்பத்திற்கேற்ப செய்து தந்தவர் இவர்தான்.
அஞ்சலி
July 9th, 2009 at 5:13 am
வருந்துகின்றோம்.
அஞ்சலிகள்.
July 9th, 2009 at 5:41 am
சிந்தாநதியின் மறைவு வருத்தத்தைத் தருகிறது!
அஞ்சலிகள்.